IPL கிரிகெட்டும், அரசாங்கமும்
Saturday, April 24, 2010
தலைமையகத்தில் நடந்த ஜும்மாவின்
இரண்டாவது அமர்வில் ஆற்றிய உரையின் சுருக்கம்.
கிரிக்கெட் பற்றிக் கூறும்போது, 11 முட்டாள்கள் விளையாடுவதை 11 ஆயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இன்று 11 அதிபுத்திசாலிகள் விளையாடுவதை 110 கோடி முட்டாள்கள் பார்க்கிறார்கள். கிரிக்கெட் மீது ஆரோக்கியமான விமர்சனங்கள் மட்டுமே எழுந்த காலகட்டம் மலையேறிவிட்டது. நூறாண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடப்படுகிறது. ஆனால் அநாகரிகமான சர்ச்சைகளும், விவகாரங்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் அப்போதெல்லாம் எழுந்ததாகத் தெரியவில்லை. என்றைக்கு கிரிக்கெட் விளையாட்டாகப் பார்க்கப்படாமல் கொள்ளை லாபம் ஈட்டும் வணிகமாகப் பார்க்கப்பட்டதோ அப்போதே அது விளையாட்டு என்ற பெயரை இழந்துவிட்டது. அது மட்டுமல்ல, பல்வேறு தடகள விளையாட்டுகள் மீதான சமூகத்தின் கவனத்தையும் கிரிக்கெட் கபளீகரம் செய்துவிட்டது. கிரிக்கெட்டின் அசுர வளர்ச்சிக்கு பன்னாட்டு நிறுவனங்களின் வணிக நோக்கமே காரணம் என்றால் அது மிகையல்ல. இரு நாடுகளுக்கு இடையிலான விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டுமேயன்றி அதை ஒரு போர் போலப் பார்க்கக் கூடாது என்ற அடிப்படைப் பண்பைக் கூட கிரிக்கெட் வளர்க்கவில்லை. மாறாக பகை உணர்ச்சியை மேலும் மேலும் தூண்டி, அதன் மூலம் காசு பார்க்கும் குறைந்தபட்ச நேர்மையில்லாத வணிக நோக்கமே மேலோங்கியிருக்கிறது. கிரிக்கெட் என்ற நல்ல விளையாட்டு குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல ஆனதற்கு யார் காரணம் என்று உற்று நோக்கினால், பன்னாட்டு வணிக நிறுவனங்களும், ஸ்பான்சர் என்ற பெயரில் வீரர்களுக்குத் தரும் பணமும், ஊடகங்கள் கிரிக்கெட்டுக்கு மட்டுமே தரும் அதிக முக்கியத்தும் மட்டுமே என்பது புரியும். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை ஏதோ இரு நாடுகளிடையிலான போராகவே பார்க்க வைக்கப்பட்டதன் காரணம் என்ன? போட்டியின் போது ஒரு பேச்சுக்கு எதிரணி வீரருக்கு சாதகமாகப் பேசினால் கூட சுற்றியிருப்பவர்கள் நம்மை தேச விரோதியாகப் பார்ப்பதற்கு யார் காரணம்? போலி தேசபக்தியை ஊட்டி வளர்த்ததன் பின்னணி வணிகம்.
கிரிக்கெட்டில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பெட்டிங் என்ற சூதாட்டம் நடைபெறுகிறது நன்றாக விளையாடும் வீரர் திடீர் அவுட் ஆவதும், சுமாராக விளையாடும் வீரர் நன்றாக விளையாடுவதும், நல்ல அணியின் திடீர் தோல்வியும், மோசமான அணியின் எதிர்பாரா இமாலய வெற்றி அடைவதுமாக கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமாகி விட்டது.இதெல்லாம் பெட்டிங்கால்தான் நடைபெறுகிறது. கிரிக்கெட்டில் வெற்றியும் தோல்வியும் மட்டுமல்ல, பெட்டிங்கும் சாதாரணம் என்று எண்ணி வழக்கம் போல வணிக நிறுவன வலையில் வீழ்ந்து கிரிக்கெட்டை மக்கள் தொடர்ந்த் ரசிக்கிறார்கள். ஐபிஎல் போட்டி ஓர் அடிமைத்தனம் குடியும், கும்மாளமும், கலாசார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் ஆட்டமும் வீடு தேடி நம் வரவேற்பறையில் ஆடும்போது தடுக்க வழியின்றித் தவித்துத்தான் போகிறோம். நடிகைகள் ஒரு ஐபிஎல் கிரிக்கெட் அணியை சில நூறு கோடிகளுக்கு ஏலம் எடுத்தார் என்று செய்திகள் வருகின்றன. வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த நடிகையால் கூட இவ்வளவு தொகையைச் சேமிக்க முடியாது எனும்போது இளம் நடிகைகளுக்கு எங்கிருந்து இத்தனை கோடிகள் வந்தன என்று வருமான வரித்துறை விசாரிக்காதது ஆச்சரியமாகத்தான் உள்ளது. சில திரைப்படங்களில் கதை என்று எதுவும் இருக்காது. ஆனால் வெறும் திரைக்கதையின் விறுவிறுப்புக்காக அந்தப் படம் வெற்றி பெறும். பிறகு அதே போல பல படங்கள் வரும்போது வெறுப்பை ஏற்படுத்தும். பல்வேறு கிரிக்கெட் அரசியலைப் பார்த்தாகிவிட்டது.கிரிக்கெட் விளையாட்டின் அடுத்த அரசியல் பரிணாமத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்தியர்கள். ஐபிஎல் போட்டிகள் விவகாரம் பெட்டிங்கிலிருந்து ஊழல் பக்கம் சென்று இப்போது குண்டு வெடிப்பில் வந்து நிற்கிறது. ஒரு அணிக்கு ரூ.1,500 கோடி, ரூ.3,000 கோடி ஏலம் என்று கூறுவதைப் பார்த்தால் கருப்புப் பணத்தில்தான் ஐபிஎல் போட்டிகளே விளையாடப்படுகிறதோ என்று சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது. ஆனால் எதுவும் சிலகாலம் என்பது போல இதுவும் கடந்து போகும். அப்போது மீண்டும் ஒரு ஐபிஎல் போட்டியை பரபரப்புடன் பார்ப்பதற்கு இந்தியர்கள் தயாராகவே இருப்பார்கள்.அதுவரை பாமர கிரிக்கெட் ரசிகன் முதல் படித்த விமர்சகர்கள் வரை சாமானியர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு ஒரு விளையாட்டு மட்டுமே. ஆனால் பண முதலைகளுக்கும், பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கும், ஊழல் அரசியல்வாதிகளுக்கும் அவர்தம் பினாமிகளுக்கும், சூதாடிகளுக்கும், நிழல் உலக தாதாக்களுக்கும், கிரிக்கெட் விளையாட்டு வெறும் விளையாட்டல்ல!
0 comments:
Post a Comment